மன்னார் பொன்தீவுகண்டல் காணி பிரச்சினை காரணமாக நானாட்டான் பிரதேச செயலக அலுலவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, அறுபதுக்கும் மேற்பட்ட பொன்தீவுகண்டல் கிராமவாசிகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
பொன்தீவுகண்டல் கிராமத்து மக்களின் பூர்வீகக் காணிகள் என்று கூறப்படும் இடத்தில் அயல் கிராமமாகிய பூவரசங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பங்களுக்கு, இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக காணிகள் வழங்கப்பட்டதை எதிர்த்து நானாட்டான் பிரதேச செயலகத்தின் முன்னால் திங்களன்று நடத்தப்பட்ட ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது, பிரதேச செயலகம் தாக்கப்பட்டிருந்தது.
இதனால் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்ததாக பிரதேச செயலாளர் பொலிசாரிடம் முறையிட்டிருந்தார். இதனையடுத்தே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகச் சொல்லப்படுகின்ற ஊர்வாசிகள் முப்பதுக்கும் மேற்பட்டவர்களை முருங்கன் பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்திருந்ததாக மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் ஜெபமாலை தெரிவித்தார்.





