கோர விபத்தில் 3 பேர் பலி, 07 பேர் படுகாயம்!!

532

கோர விபத்து

மதவாச்சி மற்றும் ஆரச்சிகட்டுவை பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்தனர். மதவாச்சி – கெபிதிகொல்லேவை வீதியின் தம்மென்னாவ பகுதியில் மகிழூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.

புதுவருடத்தை முன்னிட்டு, பொருட்களை கொள்வனவு செய்து விட்டு வீடு திரும்பியவர்களே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் இருவர் உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது உயிரிழந்தவர்கள் 36 மற்றும் 50 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் ஆராச்சிகட்டுவை பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், குழந்தை ஒன்று உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

சிற்றூர்ந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெண் வெள்ளவத்தை பகுதியை சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிற்றூர்தியில் பயணித்த அனைவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.