அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் கட்சிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.
இணக்க அரசியல் மூலம்தான் அரசியல் தீர்வு காண முடியும் என்பதில் தமது கட்சி உறுதியாக உள்ளதென அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியை நேற்று சந்தித்து பேசியதாகவும், அரசியல் தீர்வின் அவசியம், தேவைப் பற்றி கலந்துரையாடப்பட்டதாகவும் தனியே கதைக்க ஜனாதிபதி தயாராக இருக்கின்ற போதும் அரசியல் தீர்வு பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாகவே முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாகவும் டக்ளஸ் தெரிவித்தார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்த ஜனாதிபதி தயாராக உள்ளாரென அவர் கூறினார்.
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொண்டால் அதனை விரைவுபடுத்த முடியும் என ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார்.
எனவே பாராளுமன்ற தெரிவிக்குழுவை நாம் பயன்படுத்த வேண்டும் எனவும் உருவாகி வரும் சூழலை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவுக்குழுவில் விடுபட்டு போனவர்களை உள்வாங்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.





