சீனாவின் ஹெனான் மாகாணத்தில் வசிக்கும் லின் சஹாவோ என்பவர் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டிக்கு பிறக்கும் போதே இரண்டு முன்னங்கால்களும் இல்லை.
அந்த குட்டி விரைவில் இறந்துவிடுமென அதன் உரிமையாளர் எண்ணிய போது, அது மனிதர்களை போல 2 கால்களில் நடந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் அப்பகுதியில் பிரபலமான அந்த ஆட்டுக்குட்டியை பார்த்து வியந்த புற்றுநோய் பாதிப்படைந்த மாணவர் ஒருவர் அதனை 450 பவுண்டுகள் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக தெரிவித்த க்ஸ்யு என்ற அந்த மாணவர் எனக்கு புற்று நோய் இருந்தது தெரியவந்த போது நான் மனமுடைந்து போனேன். இதனால் என்னால் படிப்பை தொடர முடியவில்லை.
நான் மன உளைச்சலில் முடங்கிக்கிடந்த போது இந்த ஆட்டுக்குட்டியை பற்றி கேள்வி பட்டேன். இதனை வந்து பார்த்தபோது எனக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது போல இருந்தது.
அந்த ஆட்டுக்குட்டி எனக்கு புதிய ஊக்கத்தை தந்தது, அதனால் அதை நான் வாங்கியுள்ளேன். இப்போது நான் தன்நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார்.




