படகு வழியே ஒருபோதும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது : அவுஸ்திரேலிய அரசு!!

783

அவுஸ்திரேலியா

சட்டவிரோத படகு பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் எவரும் நுழைய முடியாது என்றும் அவுஸ்திரேலிய அரசு சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது என்றும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சரின் ஆலோசகர் தாரா கவானக் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஜூன் 25 அன்று சென்னையில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் ‘ஜீரோ சான்ஸ் (Zero Chance)’ பிரசார பணிகளை தொடங்கி வைத்த அவர், “அவுஸ்திரேலியாவின் வலிமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. அண்மையில் நடந்த தேர்தல் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை,” எனக் கூறியுள்ளார்.

கடந்த 2013 முதல் அவுஸ்திரேலிய அரசு எடுத்து வரும் எல்லைப்பாதுகாப்பு நடவடிக்கையில், 35 ஆட்கடத்தல் முயற்சிகள் தடுக்கப்பட்டு 847 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடலில் மூழ்குவதிலிருந்து உயிர்களை காப்பாற்றவும் ஆட்கடத்தல்காரர்கள் கையில் மக்கள் சிக்குவதையும் தடுக்க தற்போது புதிய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பிரசாரம் வாயிலாக சட்டவிரோத படகு பயணத்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சரின் ஆலோசகர் தாரா கவானக் குறிப்பிட்டிருக்கிறார்.