நந்திக்கடல் பகுதியில் குண்டு வெடிப்பு : தீவிரமாக தேடும் பொலிஸார்!!

479

நந்திக்கடல் பகுதியில்

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் குண்டு ஒன்று வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேப்பாபுலவு கிழக்கு 59வது படைப்பிரிவினரின் கட்டுப்பாட்டு பகுதியிலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த குண்டு வெடிப்பின் சத்தம் கேப்பாபுலவு, முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் உள்ளிட்ட பகுதி வாழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கேப்பாபுலவு-நந்திக்கடல் பகுதியில் அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து முள்ளியவளை பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வெடிப்பு சம்பவத்தால் 8 அடி ஆழமான பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், நாளை நீதிமன்றின் அனுமதியுடன் மேலதிக விசாரணைகளை அப்பகுதியில் மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.