வவுனியா மாவட்டத்தில் கடும் வறட்சி : 622 குடும்பங்களைச் சேர்ந்த 2166 பேர் குடிநீரின்றி அவதி!!

968

கடும் வறட்சி

வவுனியா மாவட்டத்தில் வறட்சி காரணமாக 03 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 622 குடும்பங்களைச் சேர்ந்த 2166 பேர் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

பொதுமக்கள் நீரை சிக்கனமாகவும் கவனமாகவும் பாவிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பாக இம்முறை மழை வீழ்ச்சி மிகக் குறைவாக காணப்பட்டதனால் வவுனியா மாவட்டத்தில் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி தொடங்கி தற்போது வரையான காலப்பகுதியில் மழை வீழ்ச்சி மிகவும் குறைவடைந்துள்ளது. இதனால் வவுனியா வடக்கில் பிரதேச செயலக பிரிவில் மருதோடை, ஊஞ்சல் கட்டி, வெடிவைத்தகல்லு, நைனாமடு, கற்குளம் உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 402 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும், வவுனியா பிரதேச செயலக பிரிவில் ஓமந்தை, காத்தார்சின்னக்குளம், மகாறம்பைக்குளம், கள்ளிக்குளம், பம்பைமடு, காத்தான்கோட்டம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 154 குடும்பங்களைச் சேர்ந்த 550 பேரும்,

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாவற்குளம், பெரியபுளியன்குளம், கங்கன்குளம், நேரியகுளம், சின்ன சிப்பிகுளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 243 குடும்பங்களைச் சேர்ந்த 1194 பேரும் குடிநீரை பெற்றுக் கொள்வதில் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்களுக்கான குடிநீரை பெற்றுக் கொடுக்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அப்பகுதி பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தோடு குறித்த வறட்சியினால் பண்ணையாளர்கள் விவசாயிகள் மற்றும் பயிற்செய்கையாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் பம்பைமடு மற்றும் கோவில்குளம் ஆகிய கமநல சேவை நிலைய பிரிவுகளில் 120 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை அழிவடைந்துள்ளது.