வவுனியாவில் மிகுதி பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அறிவிப்பு!!

318

வர்த்தக நிலையங்களில் மிகுதி பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கப்பட்டால் பொதுமக்கள் வர்த்தக சங்கத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

வவுனியாவில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுதி சில்லறைப் பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வர்த்தக நிலையங்களில் சில்லறை நாணயங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில் அரச மற்றும் தனியார் வங்கி முகாமையாளர்களுடன் வர்த்தக சங்கத்தினர் கலந்துரையாடி சில்லறை நாணயங்களை பெறுவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா வர்த்தக சங்கத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன், சில்லறை நாணயங்கள் தேவைப்படும் வர்த்தகர்கள் வர்த்தக சங்கத்தின் காரியாலத்தில் அலுவலக நேரங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, இதற்கு பின்னரும் வர்த்தக நிலையங்களில் மிகுதி பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கப்பட்டால் வர்த்தக சங்கத்தில் முறைப்பாடு செய்யுமாறு வர்த்தக சங்கத்தினர் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.