வவுனியாவில் அடைக்கலம் கோரிய முதியவருக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்த வவுனியா சாயி இல்லம்!!

558

அடைக்கலம் கொடுக்க மறுத்த சாயி இல்லம்

அடைக்கலம் கோரிச் சென்ற பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு வவுனியா, சாயி பராமரிப்பு இல்லம் அடைக்கலம் கொடுக்காது திருப்பி அனுப்பியுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாத்தறை, கம்புறுபிட்டிய என்னும் இடத்தைச் சேர்ந்த பிரேமதாச என்ற 80 வயதுடைய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மாத்தறையில் இருந்து வவுனியா வருகை தந்து பேரூந்து நிலையத்தில் இறங்கி ஏ9 வீதியில் உள்ள பேரூந்து தரிப்பிடம் ஒன்றில் நீண்ட நேரமாக அமர்ந்து இருந்ததுடன், அருகில் இருந்த உணவகம் ஒன்றில் உணவு கேட்டு பெற்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த முதியவருடன் உரையாடிய உணவக உரிமையாளர் அவர் அடைக்கலம் இல்லாது தனிமையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதை அறிந்து ஊடகவியலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் முதியவரின் நிலமையை கேட்டறிந்த பின் வவுனியா மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.கெனடி மற்றும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த அவர்கள் குறித்த முதியவரை வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள சாயி சிறுவர், முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை தங்க வைக்க சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி மற்றும் ஊடகவியலாளர்கள் கோரிய போதும் உங்களுக்கு ஏன் இந்த வேலை எனக் கூறி அடைக்கலம் கொடுக்க மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் கோவில்குளம், சிவன் முதியோர் இல்லத்தை தொடர்பு கொண்டு முதியவருக்கு அடைக்கலம் கொடுக்க அனுமதி பெற்றதுடன் ஊடகவியலாளர்களும், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் ஆகியோர் முதியோர் இல்லத்தில் குறித்த முதியவரை கொண்டு சென்றுவிட்டுள்ளனர்.