இறந்தவர் மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்!!(வீடியோ)

824

Deadஇறந்து போனதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர் 15 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் திரும்பிய அதிசய சம்பவம் நடந்துள்ளது.

கென்யாவின் நைரோபி அருகேயுள்ள நவியாஷா மாவட்டத்தின் லிமுரா நகரை சேர்ந்தவர் பால் முட்டோரா(24). திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையான முட்டோராவுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனமுடைந்து போனார்.

வாழ்வதற்கு சாவதே மேல் என முடிவு செய்த முட்டோரா, பூச்சிக் கொல்லி மருந்தை வாங்கி குடித்து விட்டார். இதனால் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த முட்டோராவை பார்த்த அவரது தந்தை, பதறிப்போய் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

எவ்வளவோ போராடி பார்த்த மருத்துவர்கள், கடந்த 8ம் திகதி நள்ளிரவு இறந்து விட்டதாக அறிவித்து விட்டனர். இதனால் துடிதுடித்து போன உறவினர்கள் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வேண்டி மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் அவர்களோ பிரேத பரிசோதனை முடியாமல் சடலத்தை தரமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்நிலையில் பிணவறையில் இருந்து சத்தம் வருவதை கேட்ட காவலாளி, பதறியபடி ஓடிச்சென்று மருத்துவர்களுக்கு தகவல் அளித்தார்.

இதற்குள் தானாகவே எழுந்து முட்டோரா நடந்து வருவதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தகுந்த சிகிச்சைகள் மேற்கொண்டு உயிர் பிழைக்க வைத்தனர்.

இச்சம்பவத்தின் போது பணியில் இருந்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.