வவுனியாவில் கடும் மழை : 552 பேர் பாதிப்பு : 3 நலன்புரி நிலையங்களில் மக்கள் தங்கவைப்பு!!

757

வவுனியாவில் கடும் மழை

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 180 குடும்பங்களைச் சேர்ந்த 552 பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 3 நலன்புரி நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

அந்தவகையில், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் உள்ள நேரியகுளம் பகுதியில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 45 வீடுகளும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது.

வவுனியா வடக்கில் மருதோடை கிராம அலுவலர் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேரும், போகஸ்வெவ பகுதியில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேரும், கெம்பலிவெவ பகுதியில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 95 பேரும்,

ஊஞ்சல் கட்டியில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேரும், புளியங்குளம் தெற்கில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் ஆக 180 குடும்பங்களைச் சேர்ந்த 552 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

புளியங்குளம் தெற்கு, மருதோடை, செட்டிகுளம் அடைக்கலமாதா வித்தியாலயம் என்பவற்றில் பாதிக்கபடபட்ட மக்களை தங்க வைப்பதற்காக 3 நலன்புரி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன்,

அங்கு 76 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரதேச செயலகம் ஊடாக சமைத்த உணவை வழங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.