வவுனியா வீரர்கள் தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் சாதனை!!

760

வவுனியா வீரர்கள்

கண்டி நாவலப்பிட்டியில் நடைபெற்ற தேசிய மட்டத்திலான குத்துச் சண்டைப் போட்டியில் வடமாகாணம் இரண்டாம் இடத்தைத் பெற்றுக் கொண்டுள்ளது.

‘சவாட் கிக் பொக்சிங்’ குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கு மாகாண வீரர், வீராங்கனைகள் 18 தங்கப்பதக்கங்களையும், 11 வெள்ளி பதக்கங்களையும், 07 வெண்கலப் பதக்கங்களையும் வென்று வடமாகாணத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த 2019.12.10 மற்றும் 11 ஆம் திகதிகளில் கண்டி மாவட்டம் நாவலப்பிட்டியில் அமைந்துள்ள ஜயதிலக விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டரங்கில் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றிருந்தது.

இலங்கை பிரான்ஸ் ‘சவேட்’ அமைப்பின் ஏற்பாட்டில், அந்த அமைப்பின் தலைவரும், தேசிய மற்றும் சர்வதேச குத்துச் சண்டை பயிற்றுனருமாகிய சி.யூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் போட்டிகள் நடைபெற்றன.

தேசிய ரீதியில் நடைபெற்ற ‘கிக் பொக்சிங்’ குத்துச்சண்டை போட்டியில் நாடு முழுவதுமிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, பல்வேறு வயது பிரிவுகளிலும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

சிறந்த குத்துச்சண்டை வீரராக வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த எஸ்.சிறிதர்சனும், சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக வவுனியா சிதம்பரபுரத்தை சேர்ந்த கெ.கிசாழினி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இக்குத்துச்சண்டை போட்டியில் சிறப்பாக விளையாடிய வவுனியாவை சேர்ந்த வீரர்களான, பதினாறு வயதுக்குட்பட்ட பிரிவில் பி.ராகுல், கே.நிறோஜன், பதினெட்டு வயது பிரிவில் எஸ்.சிறிதர்சன், வி.வசிகரன், எஸ்.சஞ்சயன், இருபத்தி ஐந்து வயது பிரிவில் ரி.நாகராஜா, பன்னிரெண்டு வயது பிரிவில் ஆர்.கே. கெவின் ஆகியோர் தேசிய விளையாட்டு அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன்,

எதிர்வரும் 2020 ஜனவரி 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவரும், வடமாகாண குத்துச்சண்டை (கிக் பொக்சிங்) பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் தலைமையில், வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து சென்ற வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொண்டு 36 பதக்கங்களை பெற்று தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டையில் வடக்கு மாகாணத்திற்கு இரண்டாம் இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

தேசிய ரீதியிலான (கிக் பொக்சிங்) குத்துச்சண்டையில் வடமாகாணம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதையடுத்து இதற்கான வெற்றிக் கேடயத்தை வடமாகாண கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார், பிரான்ஸ் ‘சவேட்’ தேசிய கூட்டமைப்பின் தலைவர் சி.பூ. பிரசாந் விக்கிரமசிங்கவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

அகில இலங்கை ரீதியிலான சவாட் கிக் பொக்சிங் குத்துச் சண்டை போட்டிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.