
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொழும்பு , கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் நாளை (24.03.2020) காலை 6.00 மணிக்குத் தளர்த்தப்பட்டு ஊரடங்கு மீளவும் மதியம் 12.00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன்,
நாளை (24.03) நண்பகல் 12.00 மணிக்கு நடைமுறைத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வரும் வெள்ளிக்கிழமை (27.03.2020) காலை 6.00 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ள நிலையில் பொதுமக்களின் நிலமையினை கருத்தில் கொண்டு வவுனியா வர்த்தக சங்கத்தினர் அதிரடி நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
பொதுமக்களின் நிலமையினை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் ஒன்றுகூடலினை தடுக்கும் முகமாக நடமாடும் வியாபாரத்தினை மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன வவுனியா வர்த்தக சங்கத்தினருக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய,
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடுவின் விசேட அனுமதியுடன் (ஊரடங்கு நேர்த்தில் நடமாடும் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு) 16 வாகனங்களில் வவுனியா முழுவதும் கிராமங்கள் தோரும் பொதுமக்களின் வீடு வீடாக சென்று வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக அரிசி 5 கிலோ, கோதுமை மா 5 கிலோ, சீனி 1 கிலோ, பருப்பு 1 கிலோ, பூடு 250 கிராம், தேயிலை 200 கிராம், சோயா 500 கிராம், டின் மீன் 1பெரிது, சமபோசா பெரிது, உப்பு 1 கிலோ, கறிதூள் 250 கிராம் போன்ற பொருட்கள் அடங்கிய பொதி விற்பனை செய்யப்படவுள்ளது.
வவுனியா வர்த்தக சங்கத்தின் இச் செயற்பாட்டிற்கு பல தரப்பினரிடமிருந்து பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில் பலசரக்கு விற்பனை நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், மருந்தகம், எரிபொருள் நிரப்பு நிலையம் என்பன மாத்திரம் திறக்குமாறு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இவை நாளையதினம் நடைமுறையில் இருக்கும் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





