பன்றிக்காய்ச்சலும் கொரோனாவும்..

H1N1 என்கின்ற பன்றிக் காய்ச்சல் உலகம் முழுவதும் பரவியது அமெரிக்காவிலிருந்து தானே அதற்கு யாரேனும் இழப்பீடு கேட்டோமா என சீனா அமெரிக்காவைப் பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் வுஹான் நகரில் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகளாவிய ரீதியில் இதுவரையில் 1 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமாக மனித உயிரிழப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே அமெரிக்கா தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவமடைந்த அமெரிக்கா சீனா மீது தனது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது.

கொரோனா வைரஸை சீனா தான் திட்டமிட்டு பரப்பியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியதோடு, சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவியது தொடர்பாக விசாரிக்கப்படும் என்றும், சீனா உண்மையை மறைத்திருந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது.

இதனால் சீனா மற்றும் அமெரிக்கா இடையே வார்த்தை போர் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா தொடர்பாக நேற்று பேசியுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங்,

“ஹெச்1என்1 காய்ச்சல் அல்லது பன்றிக்காய்ச்சல் முதன்முதலில் 2009ம் ஆண்டு அமெரிக்காவில் தான் கண்டயறிப்பட்டது. 214 நாடுகளுக்கு பரவிய அந்த நோய் சுமார் 2 லட்சம் உயிர்களைக் கொன்றொழித்தது. இதற்காக அமெரிக்காவிடம் யாராவது இழப்பீடு கேட்டோமா ?

1980 ஆண்டில் எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்டது அமெரிக்காவில் தான். இந்த நோய் உலகிற்கு பெரும் துயரமாக மாறியிருக்கின்றது. இதற்கு யாராவது அமெரிக்காவை பொறுப்பேற்குமாறு கூறினோமா ?

2008ம் ஆண்டு லேஹ்மன் சகோதரர்களிடையே ஏற்பட்ட குழப்பத்தால் உலகப் பொருளாதாரமே பாதிப்படைந்ததாக சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் கிஷோர் மஹ்புபானி குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு அமெரிக்காவிடம் யாராது இழப்பீடு கேட்டோமா ?” இன்றூ கொரோனா வைரஸ் க்கு சீனா மீது அமெரிக்கா விசாரணை நடத்துவதற்கு முனைப்பு காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என கொந்தளித்துள்ளார். அமெரிக்காவே , சீனாவை குற்றம் சாட்டுவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார்.

“இந்த வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவான எதிரி, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பாதிக்கக்கூடும். ஏனைய நாடுகளைப் போலவே, சீனாவும் இக் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இவ் வைரஸை வெளிப்படையாக மற்றும் பொறுப்பான மனப்பான்மையுடன் கட்டுப்படுத்த சீனா மிகக் கடுமையான மற்றும் முழுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கெங் கூறினார். “சீனா மிகப்பெரிய தியாகங்களை செய்துள்ளது, உலகளவில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கி வருகின்றது.

பெரிய பொது சுகாதார நெருக்கடிகள் மற்றும் தொற்று நோய்களுக்கு முகங்கொடுக்கும் போது, சர்வதேச சமூகம் ஒற்றுமையுடன் நின்று ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் , பழிவாங்கல்களை ஓரம் கட்டல் வேண்டும்.

இப்போது அமெரிக்காவின் எதிரி வைரஸ் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், சீனா அல்ல,” என்று அவர் கூறினார். “மற்ற நாடுகளைத் தாக்கி மதிப்பிடுவது இழந்த நேரத்தையும் உயிர்களையும் மிச்சப்படுத்தாது.”

சீனாவைத் தாக்குவதையும் குற்றம் சாட்டுவதையும் நிறுத்திவதோடு, பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதையும் நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக உள்நாட்டில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் கவனம் செலுத்துங்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




