விபத்தில் ஒருவர் மரணம்..

வவுனியா பறண்நட்டகல் பகுதியில் இன்று (28.07.2020) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து ஓமந்தை பக்கமாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளார்.

விபத்தினால் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்துள்ளதுடன் அதன் சாரதி சிறுகாயங்களிற்கு உள்ளாகினார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






