மன்னார் கடலில் கரையொதுங்கிய 700 கிலோ எடையுள்ள மீன்!!

685

700 கிலோ எடையுள்ள மீன்..

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஆதாம் பாலத்திற்கு உட்பட்ட தேசிய வனப்பூங்கா பகுதியில் பாரிய மீனொன்று ச டலமாக கரையொதுங்கியுள்ளதை தொடர்ந்து வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

தலைமன்னார் வன ஜீவராசிகள் திணைக்கள வட்டாரக் காரியாலய பகுதிக்குட்பட்ட நடுக்குடா கடல் வளப்பூங்கா கரையோரப்பகுதியில் ‘கடற்பன்றி’ என பெயருடைய பாரிய மீன் கரையொதுங்கியிருந்தமையை கடற்கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் அவதானித்து வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

அதனை தொடர்ந்து குறித்த திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வந்து குறித்த மீனை பார்வையிட்டதுடன், ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

அதனடிப்படையில் குறித்த மீனின் ஒரு பகுதி உணவுக்காக வேட்டையாடப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மீனின் உடல் கூற்றுப்பரிசோதனை வன ஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கடற்பன்றி இனமானது தற்போது அருகிவரும் பாலூட்டி மீன் இனத்தைச் சேர்ந்தது என்பதுடன், கரையொதுங்கிய கடற்பன்றி 3.3 மீற்றர் நீளமானதும் சுமார் 700 கிலோ கிராம் எடை கொண்டதாகும்.

குறித்த கடற்பன்றியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் குறித்த அறிக்கையானது மன்னார் நீதவான் நீதிமன்றிற்கு சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.