வவுனியாவில் வெளிமாவட்டத்திலிருந்து வருகை தந்து யாசகம் : சொந்த இடங்களுக்கு செல்லுமாறு பணிப்பு!!

617

யாசகர்கள்..

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

யாசகர்களினால் கொவிட் -19 அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் வெளிமாவட்ட யாசகர்கள் வவுனியா குடியிருப்பு குளக்கட்டிற்கு அருகே தங்கியிருப்பது தொட்ர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் விக்டர்ராஜ் கவனம் செலுத்தியிருந்தார்.

வெளிமாவட்டத்தில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து யாசகம் செய்யும் யாசகர்கள் தங்கிருக்கும் பகுதியான குடியிருப்பு குளக்கரைப் பகுதிக்கு இன்று (08.11) காலை சென்ற அவர் அங்கு தங்கியிருந்த குழந்தைகள் , சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 8 பேரை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாடினார்.

அதன் போது தாங்கள் கண்டி, ஏறாவூர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் தாம் வவுனியா வருகை தந்து மூன்று தினங்களே ஆகுவதாவும் யாசகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் ஊடகவியலாளர்களினால் இவ்விடயம் தொடர்பில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க.தியாகலிங்கம் அவர்களுக்கு தெரியப்படுத்தியமையினையடுத்து பொது சுகாதார பரிசோதகர் இளங்கேஸ் குறித்த பகுதிக்கு வருகை மேற்கொண்டிருந்ததுடன் அவர்களை அவர்களது சொந்த இடத்திற்கு செல்லுமாறு பணித்ததுடன் மீறி தங்கியிருந்தால் பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து யாசகர்கள் தாம் சொந்த இடத்திற்கு செல்வதாக தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்று சென்றனர்.