கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட யுவதி உயிரிழப்பு!!

1689

மதுரா அனந்தராம்..

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கனடாவின் ஒன்ராறியோ, North Bay அருகே வார விடுமுறையில் நிகழ்ந்த வீதி விபத்தொன்றில் குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் ஸ்காபொரோவை சேர்ந்த 31 வயதான மதுரா அனந்தராம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நெடுந்தெரு 11இல் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நெடுஞ்சாலையில் படகொன்றை இழுத்துச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் குறித்த யுவதி பயணித்த வாகனம் அதில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு வாகனங்களிலும் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளதுடன், இரண்டாவது வாகனத்தில் பயணித்த தமிழ் யுவதி படுகாயமடைந்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.