தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற முடிவு : இறுதி நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!

1010

சிங்கபூரில்..

சிங்கபூரில் தமிழர் ஒருவருக்கு நாளைய தினம் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் தர்மலிங்கம் 11 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். இந்நிலையில், அவருடைய மரண தண்டனைக்கு எதிரான இறுதி முயற்சிக்காக இன்று அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எனினும், அவர் சிறிது நேரத்தில் நீதிமன்றில் இருந்து அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார்.

இது எதிர்பாராத ஒன்று என்று கூறிய நீதிபதி ஆண்ட்ரூ பாங், இந்தச் சூழ்நிலையில் விசாரணையைத் தொடர்வது பொருத்தமாக இருக்காது என்றார். மரண தண்டனையை நாளை நிறைவேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

குற்றவாளிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் மரண தண்டனையை அந்த நிலையில் நிறைவேற்றுவது சரியல்ல எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், மரண தண்டனைக்கு எதிரான விசாரணை பின்னொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனது சகோதரனை மீட்க தொடர்ந்தும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாகேந்திரனின் சகோதரி சர்மிளா தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“நான் தனியாக இருக்கும் நேரம், என் சகோதரனை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. ஆனால் நாம் தைரியமாக இருக்க வேண்டும், தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் – எதுவும் நடக்கலாம்,” என்று கூறினார்.

2009ம் ஆண்டு, அப்போது 21 வயதான நாகேந்திரன் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஹெராயின் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

ஹெரோயின் கடத்தியதற்காக, நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்பவருக்கு கடந்த 2010ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

12 வருடங்களுக்கு முன்னர் சிறிய அளவிலான ஹெரோயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயன்றதற்காக நாகேந்திரன் தர்மலிங்கம் நாளை தூக்கிலிடப்படவிருந்தார்.

எனினும், நாகேந்திரனின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்து மலேசிய அதிகாரிகளும் மனித உரிமைக் குழுக்களும் மரணதண்டனையை நிறுத்தி வைக்குமாறு அழைப்பு விடுத்தனர். எவ்வாறாயினும், நாகேந்திரனின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.