திருமணமான கல்லூரி மாணவி தம்பியுடன் பரிதாபமாக பலியான சோகம்!!

533

ஈரோடில்..

விதி எப்படியெல்லாம் நிமிஷ நேரத்துல வாழ்க்கையைப் புரட்டி போட்டு விட்டுட்டு எதுவுமே தெரியாத மாதிரி கடந்து போயிடுதுன்னு தெரியலையே என்று புலம்பி, சோகத்தில் அரற்றி வருகிறார்கள் பெரியகொடிவேரி பகுதி மக்கள்.

சந்தோஷமா சிரிச்சி, பேசிக்கிட்டு திரிஞ்ச பொண்ணு. காலேஜூக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டி கிளம்பி போன பொண்ணைப் பிணமா தானே பார்த்தோம் என்று ஊர்மக்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அன்றைய விடியல் இத்தனை சோகத்தோடு விடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஈரோட்டு அருகே அக்காவும், தம்பியும் சென்று கொண்டிருந்த பைக் மீது அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த வேன் மோதிய விபத்தில் திருமணமான கல்லூரி மாணவி தம்பியுடன் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.‌

ஈரோடு மாவட்டம் பெரியகொடிவேரி பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவருக்கு ஞான சவுந்தர்யா (22) என்ற மகளும், கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் உள்ளனர். ஞானசவுந்தர்யாவுக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

ஞான சவுந்தர்யா தனது கணவர் அசோக்குடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசித்து வந்தார். திருமணமாகிய நிலையில் ஞான சவுந்தர்யா அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டும் படித்து வந்தார்.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது அக்கா ஞான சவுந்தர்யாவை பெரியகொடிவேரியில் உள்ள வீட்டுக்கு அழைத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் குமாரபாளையம் சென்று உள்ளார்.

பின்னர் கிருஷ்ணமூர்த்தி ஞானசவுந்தர்யாவை அழைத்து கொண்டு குமாரபாளையத்தில் இருந்து பவானி – சத்தியமங்கலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

இருவரும் ஆப்பக்கூடல் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் ஒன்று கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். ஞான சவுந்தர்யா சாலையோரம் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆப்பக்கூடல் போலீசார் விபத்தில் பலியான கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். இதனையடுத்து பவானி அரசு மருத்துவமனையில் விபத்தில் உயிரிழந்த அக்கா, தம்பி உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

ஆப்பக்கூடல் பகுதியில் கடந்த 2 நாட்களில் சாலை விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். அதனால் ஆப்பக்கூடல் மற்றும் பவானி சாலையில் ஆப்பக்கூடல் நால்ரோடு பகுதி, காவல் நிலையம் பகுதியில் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வேகத்தடை அமைத்து கொடுத்து மேலும் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.