பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை பலி.. கதறி அழுத உறவினர்கள்!!

487

சென்னையில்..

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கோட்டீஸ்வரன் (31)- ஜனகவள்ளி (28) தம்பதி வசித்து வந்தனர். கோட்டீஸ்வரன் சொந்தமாக ஆட்டோ, கார் வைத்து ஓட்டி வருகிறார்.



இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், மீண்டும் கருவுற்ற ஜனகவள்ளி 2ஆவது பிரசவத்துக்காக புளியந்தோப்பு, திருவேங்கடசாமி தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மகப்பேறு மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஜனகவள்ளிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜனகவள்ளி உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தாய், குழந்தை இருவரும் இறந்துவிட்டனர் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். அப்போது, புளியந்தோப்பு மகப்பேறு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததும், உரிய சிகிச்சை அளிக்காததால் தான் ஜனகவள்ளி மற்றும் அவரது குழந்தை இறந்ததாக கூறி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு சென்ற போலீசார் அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் ஜனகவள்ளியின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் புளியந்தோப்பு காவல் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கர்ப்பிணி இறப்பு குறித்து விசாரணை நடத்தும்படி மருத்துவ கல்வி இயக்குனருக்கு துணை கமிஷனர் பரிந்துரை கடிதம் கொடுத்தார். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.