காதலனுக்கு பிறந்த நாள் பரிசாக குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த காதலி.. நடந்த விபரீதம்!!

3211

ராமநாதபுரத்தில்..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சஞ்சீவ் குமார் (18), என்ற இளைஞர் திருப்பூரில் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது பிறந்த நாளை சென்னையில் உள்ள தன்னுடைய காதலியுடன் கொண்டாடுவதற்காக கடந்த 7 ம் தேதி திருப்பூரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்.



சென்னையில் காதலியுடன் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு 7ம் தேதி இரவு மீண்டும் திருப்பூர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றார். அவரது காதலியான 16 வயது சிறுமி வாங்கி வந்த குளிர்பானத்தை சஞ்சீவ் குமார் குடித்துள்ளார்.

அதனை குடித்து முடித்ததும், என்னை மன்னித்து விடு உன்னை பழி வாங்குவதற்காகவே சென்னைக்கு வரவழைத்து குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்தேன், என காதலியான சிறுமி சஞ்சய் குமாரிடம் அழுது கொண்டே தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சுதாரிப்பதற்குள் அடுத்த அதிர்ச்சி நடந்தது.

அதாவது, சிறுமி, கோயம்பேடு பேருந்து நிலையம் வந்திருப்பதை அறிந்த அவரது தாயார் மற்றும் மூத்த சகோதரி ஆகிய இருவரும் அங்கு வந்து சஞ்சீவ் குமாரை கடுமையாக தாக்கி செல்போனையும் உடைத்துள்ளனர்.

இதனால் பயந்து போன சஞ்சய் குமார் இரவு முழுவதும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கி விட்டு மறுநாள் காலை ஆவடியில் உள்ள தனது மாமா செல்வராஜ் என்பவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர், தான் காதலித்த பெண் தனக்கு விஷம் கொடுத்து விட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். அதன் பின்னர் உடல்நிலை மோசமடையவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சிகிச்சையில் இருந்த சஞ்சீவ் குமார், தன்னுடைய காதலி, தனக்கு குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்து விட்டதாகக் காவல் துறையினரிடம் மரணம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார்.

பின்னர் சஞ்சீவ் குமாரின் உடல் அவருடைய சொந்த ஊரான பரமக்குடிக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை கொலை வழக்காக பதிவு செய்திருப்பதால், போலீசாரின் உத்தரவின்பேரில் சஞ்சீவ் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோயம்பேடு போலீசார் கொலை, கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் சஞ்சீவ் குமார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக காதலி சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில், கடந்த ஆண்டு சிறுமியின் பெற்றோருக்கு இந்த விவகாரம், தெரியவந்ததை அடுத்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். அதன்பேரில் சஞ்சீவ் குமாரை (17) கைது செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள்.

அவர் வெளியே வந்தபிறகும் காதல் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் காதலியான சிறுமி சஞ்சீவ் குமாருக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை செய்ததாக புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.