கோவையில்..
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (வயது 24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் நிவேதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணேசனுக்கு தெரிய வர, நிவேதாவை கண்டித்ததாக தெரிகிறது.
கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காமல் நிவேதா தொடர்ந்து முருகனுடன் தவறான எண்ணத்துடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பணி முடித்து கணேசன் வீடு திரும்பியபோது, நிவேதாவுடன் முருகன் தனிமையில் இருந்ததாகவும், கணேசனைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணேசன், நிவேதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு கணேசன் தனது காதல் மனைவியை உடல் முழுவதும் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது நிவேதா உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர், நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், தப்பியோடிய நிவேதாவின் கணவர் கணேசனை தேடி வருகின்றனர். திருமணம் கடந்த உறவால் காதல் மனைவியை கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.