பெற்றோர் கடும் எதிர்ப்பு… எம்.எல்.ஏ. அலுவலகத்தில் திருமணம் செய்த ஜோடி!!

484

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே ஒரே சமூகத்தைச் சேர்ந்த காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தங்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவை அந்தக் காதலர்கள் நாடிய நிலையில், உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.



புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியாணிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவராஜ் (30). இவர் அரவம்பட்டியைச் சேர்ந்த சொர்ணபாப்பா (23) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டைச் சேர்ந்த பெற்றோரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதனால் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க யாரும் முன் வராவில்லை. இனியும் பெற்றோரை நம்பினால் தங்களை பிரித்துவிடுவார்கள் என்று எண்ணிய காதல் ஜோடி, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தது.

இதைத் தொடர்ந்து தங்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையை நாடியுள்ளனர்.

இதனையடுத்து எம்எல்ஏ சின்னத்துரை உடனடியாக அரவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் மற்றும் அரியாணிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் ஆகியோரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வரவழைத்தார்.

அவர்களது முன்னிலையில் சிவராஜ் மற்றும் சொர்ண பாப்பாவிற்கு எம்எல்ஏ சின்னத்துரை காதல் திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை எம்எல்ஏ அலுவலகத்திலேயே வைத்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பெற்றோர் தரப்பில் சமாதானப்படுத்தி மணமக்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஊராட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.