கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபம் அருகே தந்தையால் கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபத்தை அடுத்த பிலாங்காலை பகுதியைச் சேர்ந்த பிபின் – பிரியா தம்பதியின் 3 வயது மகன் ஆத்விக்.

கடமலைக்குன்று பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் காரில் பள்ளிக்குச் சென்ற சிறுவனை, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்த 20 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிறுவனின் தாய் தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் சிறுவனின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருவதும், இந்த நிலையில் சிறுவனின் தந்தையே அவரை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, நாகர்கோவில் அருகே பிபினின் நண்பர் வீட்டிலிருந்த சிறுவன் ஆத்விக்கை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.





