கரூரில்..
ஹனிமூன் சென்ற இடத்தில் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுத்திணறலால் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார்.
பொறியாளரான இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர் 25 வயதான தனது மனைவி கிருபா உடன் பல ஊர்களுக்கு ஹனிமூன் சென்று திரும்பிய நிலையில் குமரி மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையான நெட்டா பகுதியிலுள்ள சிற்றாருக்கு சென்றுள்ளனர்.
அங்குள்ள அணையின் கரையில் அமைந்துள்ள ரிசார்ட் உணவகம் ஒன்றில் செவ்வாய்கிழமை அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் விடுதியில் வழங்கபட்ட நண்டு உணவை தினேஷ்குமார்-கிருபா தம்பதியினர் விரும்பி சாப்பிட்டுள்ளனர்.
அப்போது தனது மனைவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கணவர் தினேஷ்குமார் ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கிருபாவை மீட்டு குலசேகரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கிருபா உயிரிழந்தார். தகவலறிந்த கடையாலுமூடு காவல்துறையினர் உயிரிழந்த கிருபாவின் உடலை கைபற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குபதிவு செய்து விடுதியில் வழங்கப்பட்ட உணவால் உயிரிழப்பு ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கிருபாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே ஆகிறது. அவருக்கு சிறுவயதிலிருந்தே மூச்சு திணறல் பிரச்சனை இருந்தும் வந்ததாகவும், அதற்குரிய மருந்துகளை கையொடு அவர் எடுத்துச்சென்ற நிலையிலும் இந்த உயிரிழப்பு நேர்ந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனியார் விடுதி மேலாளர் கூறுகையில், “புதுமண தம்பதியர் மதியம் வேளையில், அவர்கள் தங்கி இருந்த அறைக்கு நண்டு உணவை கொண்டு வருமாறு ஆர்டர் செய்தனர்.
இளம் பெண் நண்டு குழம்பை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டதாகவும், கையில் கொண்டு வந்த மருந்துகளை உண்ட பின்பும் அவருக்கு மூச்சு திணறல் நிற்கவில்லை என்று இந்த பிரச்சனை ஏற்பட்டு சில மணி நேரத்திற்கு பிறகு தான் கணவர் எங்களிடம் தகவலை தெரிவித்தார்.
உடனடியாக நாங்கள் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு வைத்து தான் சிகிச்சை பலனின்றி அந்தப்பெண் உயிரிழந்தார். சிகிச்சைக்கு தாமதமாக சென்றதும் அவர் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக உணவக மேலாளர் தெரிவித்துள்ளார்.