தேன்கனிக்கோட்டையில்..
இன்றைய பள்ளிப்பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் எதுவும் கேட்க கூடாது. வீட்டில் பெற்றோர்களும் கண்டிக்க கூடாது . உடனே பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.
இதனால் விபரீதமான முடிவுகளையும் எடுத்துவிடுகின்றனர். பெற்றோருக்கும் பயந்து, பிள்ளைகளுக்கும் பயந்து இன்றைய பெற்றோரின் நிலைமை மிக பரிதாபமாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன்.கூலித்தொழிலாளியான இவருடைய மகள் சுபிஷா. இவர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சமீபத்தில் பள்ளியில் நடத்தப்பட்ட மாதாந்திர தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்து மதிப்பெண்கள் குறைவாக வாங்கியது குறித்து கண்டித்துள்ளனர்.
வீட்டுக்கு சென்ற பெற்றோர் மகளை மதிப்பெண்கள் குறைந்ததற்காக கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி சுபிஷா வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் மதிப்பெண் குறைந்ததை பெற்றோர் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.