ஆந்திர மாநிலத்தில், திருமணமாகி மூன்றே மாதத்தில், யூ-ட்யூப் பார்த்து மனைவியின் கழுத்தை கயிற்றால் நெறித்து கொலை செய்ததாக கணவன் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பங்காரம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தடுதூரி அனுஷா (22). இவருக்கும் ஜெகதீஷ் (30) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
ஜெகதீஷ் விசாகப்பட்டினத்தில் சிஆர்பிஎப் வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய மனைவி அனுஷா திருமணத்திற்கு செய்துக் கொள்வதற்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த பிரசாத் என்பவருடன் பழகி வந்தது ஜெகதீஷூக்கு தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து தன்னுடைய மனைவி அனுஷாவைக் கொலைச் செய்ய ஜெகதீஷ் தீட்டம் தீட்டியுள்ளார். கடந்த ஜூன் 16ம் தேதி இரவு 11 மணியளவில் அனுஷாவை கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கி ஜெகஷீஷ் கொலைச் செய்துள்ளார்.
அதன் பின்னர் மனைவி அனுஷாவின் செல்போனில் இருந்து அனுஷாவின் தந்தை, சகோதரர், அனுஷாவின் தோழி ஆகியோருக்கு, தன்னுடைய முன்னாள் காதலன் பிரசாத் தனக்கு தினமும் போன் செய்து தொல்லைத் தருவதாகவும், தனக்கு வாழப் பிடிக்காததால் தற்கொலைச் செய்துக் கொள்ளப் போவதாகவும் அனுஷா அனுப்பியது போல மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
இதனால் மகளின் இறந்த செய்தி கேட்டு அனுஷா குடும்பத்தினர் பிரசாத்தின் வீட்டை தாக்க சென்றனர். விஷயம் விபரீதமானதை உணர்ந்த பிரசாத் குடும்பத்தினர், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு போன் செய்து தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற எஸ்.ஐ மகேஷ் மற்றும் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு விசாரணை நடத்த துவங்கினார்கள்.
ஜெகதீஷ் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் மாட்டு தொழுவம் அருகே அனுஷாவின் சடலம் கிடந்துள்ளது. போலீசார் பிரசாத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அனுஷாவுக்கும் பிரசாத்துக்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாகவே எந்தவிதமான உரையாடலும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
அது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு வீட்டில் மாப்பிள்ளைப் பார்க்க துவங்கியதுமே அனுஷா பிரசாத்துடனான உறவை முறித்துக் கொண்டிருக்கிறார். பிரசாத்தும் அதன் பின்னர் அனுஷாவைத் தொந்தரவு செய்யவில்லை.
இந்நிலையில், அனுஷா அனுப்பிய மெசேஜ் ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு சென்றது எப்படி என போலீசார் விசாரித்தனர். அனுஷாவின் கணவர் ஜெகதீஷிடம் விசாரித்தபோது உண்மை தெரிய வந்தது.
போலீசார் விசாரணையில் ஜெகதீஷ் கூறுகையில், “தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், வேறு வழியின்றி அனுஷாவை திருமணம் செய்துக் கொண்டு, அனுஷாவை வீட்டில் விட்டுவிட்டு வெளியில் வேலைக்கு சென்று விட்டேன்.
பிரசாத்துடன் காதலித்து அனுஷா ஊர் சுற்றி வந்தது தெரிந்ததால், இப்போதும் மனைவி பிரசாத்துடன் கள்ள உறவு வைத்திருக்கிறார் என்று சந்தேகம் ஏற்பட்டு, அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.
ஒரு வாரத்திற்கு முன் வந்து, மனைவியை அழைத்துக்கொண்டு விஜயநகரம் மற்றும் பல இடங்களில் சுற்றினேன். பின்னர் வேலையில் இருந்து அழைப்பு வந்ததாக கூறி அனுஷாவை வீட்டிற்கு அனுப்பி விட்டேன்.
பின்னர் விசாகப்பட்டினம் சென்று 16ம் தேதி இரவு பங்காரம்மாபேட்டை கிராமத்திற்கு சென்று வீட்டில் இருந்து வெளியே வருமாறு மனைவி அனுஷாவை அழைத்து அவரது நடத்தை குறித்து கேள்வி கேட்டேன்.
எனக்கு விஷயம் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த அனுஷா, அதன் பின்னர் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதனால் ஏற்கனவே யு-ட்யூப்பில் தடயம் இல்லாமல் கொலைச் செய்வது எப்படி என பார்த்து அதற்கேற்ப நைலான் கயிற்றை வாங்கி வைத்திருந்ததால், அனுஷாவின் கழுத்தில் நைலான் கயிற்றை இறுக்கி மூச்சு விடமுடியாமல் கொலைச் செய்தேன்.
அதன் பின்னர் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த மெசேஜை அனுஷா செல்போனில் இருந்து ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு அனுப்பினேன்” என வாக்குமூலம் அளித்து அதிர வைத்திருக்கிறார். இதனையடுத்து ஜெகதீஷை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.