
யாழ். வல்வெட்டித்துறை கடலினூடாக படகில் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராசப்பா பகீர்சாமி (67) என்ற நபர், மீனவர்களுடன் சேர்ந்து படகொன்றில் இந்தியாவிற்குச் செல்ல முற்பட்ட வேளை நேற்று வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே குறித்த நபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர், இந்தியாவின் நாகப்பட்டிணத்தினைச் சேர்ந்தவர் என்றும் கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து, வல்வெட்டித்துறையிலுள்ள தேநீர் கடையொன்றில் பணியாற்றி வந்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், இவர் மீண்டும் இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.





