வவுனியாவில் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் கைது!!

2930

வவுனியா நகரத்தில் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் வவுனியா பொலிசாரால் நேற்று (30.04.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா யாழ்வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வாகனம் ஒன்றில் வந்த இருவர் உணவுப்பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.

குறித்த வாகனத்தினை சுகாதார பரிசோதர்கள் பரிசோதனை செய்ய முற்பட்டபோது விற்பனையாளர்களினால் அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சற்றுநேரம் குழப்பநிலை ஏற்ப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்வதனால், உணவில் நச்சுவாயுக்கள் கலக்கும் சந்தர்ப்பம் ஏற்படுவதுடன் அந்தபகுதியில் கழிவுநீர் வழிந்தோடும் கால்வாயும் காணப்படுகின்றது.

எனவே இவ் வாகனத்தை வேறு பகுதிக்கு எடுத்துச் சென்று அங்கே விற்பனை செய்யுமாறு சுகாதார பரிசோதகர்களால் தெரிவிக்கப்பட்ட போதும் விற்பனையாளர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

இதனை அடுத்து சுகாதார பரிசோதகர்களால் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் குறித்த இருவரினையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.