பேஸ்புக் – இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஏற்பட்ட திடீர் அச்சுறுத்தல்!!

260

மெட்டா நிறுவனத்தின் புதிய மெட்டா ஏஐ (Meta AI) அம்சங்களில் ஒன்றான கிளவுட் பிராசஸிங் (Cloud Processing) தொழில்நுட்பம், பயனர்களின் தரவுகளை மெகா-தரவகங்களில் பகுப்பாய்வு செய்வதற்காக பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்கள், படங்கள், காணொளிகள் உள்ளிட்டவை மெட்டாவின் AI மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு சேமிக்கப்படுகின்றன.

அண்மையில், சில தொழில்நுட்ப ஆய்வாளர்கள் மற்றும் தனியுரிமை ஆர்வலர்கள், இந்த தொழில்நுட்பம் பயனர்களின் அனுமதியின்றி தகவல்களை சேகரிக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தனியுரிமை மீறலாகவும், கண்காணிப்பு அச்சுறுத்தலாகவும் கருதப்படுகிறது.

மெட்டா நிறுவனம், இவ்வாறு சேமிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதன் செயல்முறை பற்றிய தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை.

அது மாத்திரமன்றி, ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் கையடக்க தொலைபேசிகளில் உள்ள புகைப்படங்களை அணுக மெட்டா ஏஐ-க்கு அனுமதி அளித்தால், அந்தப் படங்களை ‘கிளவுட் பிராசஸிங்’ என்ற பெயரில் ஸ்கேன் செய்து கிளவுடில் சேமித்துக் கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பயனர்கள் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தனியுரிமை என்பனவற்றை பெரிதும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது என அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றது.

மெட்டா நிறுவனம், தனது ஏஐ மொடல்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக பயனர்களின் தரவைப் பயன்படுத்துகிறது என முன்பிலிரந்தே குற்றம் சுமத்தப்பட்டு வருவதுடன் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள தரவுகள் ஏற்கனவே இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பலர் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இந்த புதிய மெட்டா ஏஐ (Meta AI) அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்களின் தொலைபேசியில் உள்ள புகைப்படங்கள் தானாகவே, குறிப்பிட்ட இடைவெளியில், மெட்டாவின் கிளவுட் ஸ்டோரேஜில் பதிவேற்றப்படும்.

பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளுக்கான ஏஐ அடிப்படையிலான ஃபில்டர்கள், போட்டோ கோப்புக்கள் போன்ற உருவாக்க திட்டங்களை (Creative ideas) மெட்டாஏஐ இதன்மூலம் வழங்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது பாதுகாப்பானது என்று பயனர்களிடம் கூறப்பட்டாலும், பயனர்கள் பதிவேற்றாத புகைப்படங்களையும் மெட்டா ஏஐ அணுகும் என்பது குறிப்பிடத்தக்க தனியுரிமைச் சிக்கல் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த பயனர்கள விருப்பம் தெரிவிப்பதாகவும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இதை முடக்கலாம் என்றும் மெட்டா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.