திருமணமான 4வது நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்!!

94

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் இளம்பெண்ணொருவர் திருமணமான நான்காவது நாளிலேயே உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). இவருக்கும் காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

பன்னீர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். லோகேஸ்வரி பட்டப்படிப்பை முடித்தவர் ஆவார்.

இந்த நிலையில் 30ஆம் திகதி தாய் வீட்டிற்கு சென்ற லோகேஸ்வரி, தனது பெற்றோரிடம் கணவர் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து திங்கட்கிழமை இரவு லோகேஸ்வரி வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே லோகேஸ்வரி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதன் பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார், வழக்குப்பதிவு செய்து பன்னீர் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பன்னீர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு லோகேஸ்வரியை கொடுமைப்படுத்தியுள்ளனர். அதாவது 5 சவரன் நகை கொடுப்பதாக பெண் வீட்டார் ஒப்புக்கொண்ட நிலையில், 4 சவரன் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.

எனினும் சீர்வரிசை பொருட்களுடன் இருசக்கர வாகனம் ஒன்றை கொடுத்துள்ளனர். ஆனாலும், மீதமுள்ள 1 சவரன் நகையை வாங்கி தருமாறு கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

திருப்பூரில் திருமணமான 78 நாட்களில் ரிதன்யா என்ற இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது நான்காவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.