தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் இளம்பெண் திருமணமான 6 மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியகுமாரியின் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஜெமலா. பட்டதாரியான இவர் சின்னத்துறையைச் சேர்ந்த நிதின் ராஜ் (26) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரின் குடும்பத்தாரிடம் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அதன் பின்னர் பெண் வீட்டார் சார்பில் புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டு தம்பதியர் குடியேறினர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் ஜெமலா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக நிதினின் உறவினர்கள் ஜெமலாவின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.
மேலும், தனியார் மருத்துவமனையில் மகளின் உடல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பெற்ற ஜெமலாவின் பெற்றோர் அங்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து கருங்கல் பொலிஸார் ஜெமலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நிதினுக்கு சரியான வேலை இல்லாததாலும், அவர் வெளிநாடு செல்வதாக கூறி வந்ததாலும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஜெமலாவின் தாயார் தன் ‘மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக’ பொலிசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.