தமிழர் பகுதியில் சோகம் : ஒரே நாளில் நான்கு சிறுவர்கள் பரிதாப மரணம்!!

433

மட்டக்களப்பு- வாகரை, பனிச்சங்கேணி வாவியில் நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (06.07.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு- வாகரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்று வந்த குடும்பம் ஒன்றின் மூன்று பிள்ளைகளே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வாகரை,கறுவாச்சேனை பகுதியில் மீன்பிடிக்கச்சென்று திரும்பிய நிலையில் குளத்தில் மூழ்கியே உயிரிழந்துள்ளனர்.

குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கிய நிலையிலேயே சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த மூவரும் 10 மற்றும் 11 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்ததோடு, மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.பி.எச். சில்வா தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேபோன்று மட்டக்களப்பு-கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் பேருந்து மோதியதில் ஏழு வயதுடைய பி.கவிசேக் என்னும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

செங்கலடியிலிருந்து உறுகாமத்திற்கு சென்று பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முனைந்தபோது எதிர்திசையில் வந்த பேருந்து மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.