
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன்–பவானி தம்பதியரின் மகன் சஞ்சீவ் மித்ரன் (3).
நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி முன்பு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் கவலையடைந்தனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை தேடியுள்ளனர். அப்போது வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் சஞ்சீவ் மித்ரன் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியை உருக்கச் செய்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





