
கண்டி யாழ்ப்பாணம் வீதியின் வவுனியா நகருக்குட்பட்ட 3 கிலோமீற்றருக்குட்பட்ட பகுதி அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகள், சிறு வீதிகள், கிராமிய வீதிகள் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரட்நாயக்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியால் இவ்வாறு கூறப்பட்டிருந்தது. அந்தவகையில் கண்டி யாழ்ப்பாணம் வீதியில் வவுனியா பொலிஸ் நலன்புரிச்சங்கத்திற்கு அண்மையில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைஉள்ள பகுதிக்கும் இடையில் உள்ள 3 கிலோமீற்றர் நீளம் கொண்ட பகுதி (176-179 கி.மீ) அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளது. அதற்காக 1322 மில்லியன் ரூபாய் பணம் மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்தி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்டம் என்பனவும் அகலப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் நகரப்பகுதியில் உள்ள வடிகால்களை சீரமைப்பதடன் அதற்கு சீமெந்திலான மூடிகளை இடும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தில் இவ்வருடம் போக்குவரத்து சமிஞ்சை விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் தெரிவிக்கப்பட்டிருந்தது.





