வவுனியாவில் பிறப்பு – இறப்பு சான்றிதழ் பெறுவதில் சிரமம் : அதிகாரி இல்லையென அலைக்கழிப்பு!!

1078

வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டமையால் அவற்றை பெற்றுக்கொள்ள செல்லும் பொதுமக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பிறப்பு – இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் பொதுமக்களை அங்குள்ள உத்தியோகத்தர்கள்,

சான்றிதழ்களில் கையொப்பம் இடுவதற்கு அதிகாரிகள் இல்லை என வேறு பிரதேச செயலங்களுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளமையுடன் தமக்கு நிரந்தர பதிவாளர் இன்மையினால் அடிக்கடி இந்த நிலமை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் பல தடவைகள் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்ப வேண்டிய நிலமையும் உருவாகியுள்ளமையுடன் இவை பொதுமக்களை அலைக்கழிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.

எனவே இவ்விடயத்தில் உயர் அதிகாரிகள் தலையிட்டு மக்களுக்கு திறன்பட சேவையினை வழங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு முன்னரும் நிரந்த பதிவாளர் இன்மையினால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என செய்திகள் ஊடகங்களில் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்று வரை மக்களை அலைக்கழிக்கும் செயற்பாடே வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.