
தெலுங்கானாவில் யூடியூபரும் கல்லூரி மாணவியுமான 21 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தெலங்கானா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பானு கோமாளி (வயது 21). இவரது தாயார் குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது தாயார் குவைத் நாட்டில் உள்ள நிலையில் பானு ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி படித்து வந்தார்.
பானு ஒரு பகுதி நேர யூடியூபராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி குவைத்தில் உள்ள தனது தாயாரான சத்யா வரலட்சுமியின் தொலைபேசிக்கு அதிகாலை 1.34 மணி அளவில் பானு, மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில் “நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அம்மா.. கவனமாக இருங்கள்.. என்னுடைய தம்பியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியிருந்தார். மறுநாள் காலையில் இந்த மெசேஜை பார்த்த அவரது தாய் வரலட்சுமி, தனது மகள் பானுவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார்.
ஆனால் பானுவின் தொலைபேசி ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் பதற்றம் அடைந்த வரலட்சுமி தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் ஹைதராபாத்தில் பானு தங்கி இருந்த வீட்டிற்கு உடனடியாக சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
வரலட்சுமியின் நண்பர் பானு கோமாளி தங்கி இருந்த வாடகை வீட்டிற்கு சென்று, வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டிய போதும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த வரலட்சுமியின் நண்பர், அக்கம்பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் பானு கோமாளி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பானு கோமாளியும் மென்பொருளாளராகவும் யூடியூபராகவும் இருந்து வரும் 27 வயது அகில் என்ற இளைஞரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரியவந்தது.
பின்னர் இருவருக்கும் இடையேயான உறவில் முறிவு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்ததாகவும், இதனால் பானு மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிய வந்தது.
அதேசமயம் இதே காரணத்திற்காக 6 மாதங்களுக்கு முன் பானு தற்கொலை செய்ய முயற்சி செய்து பின்னர் அவர் காப்பாற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் போலீசார் கதலனிடம் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.





