
ஒடிசாவின் புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை லட்சுமிப்பிரியா பெஹரா (நிகிதா) 2019 ஜனவரி 4ஆம் தேதி கட்டாக் நகரில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
குடும்ப தகராறு காரணமாக கணவர் லிபன் சாஹு தள்ளிவிட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிகிதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கட்டாக் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மனைவியை திட்டமிட்டு கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி நடிகர் லிபன் சாஹுவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்றம் தனது தீர்ப்பில் குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டதாக குறிப்பிட்டது.
போதிய ஆதாரங்கள் இல்லாததால் லிபன் சாஹுவின் பெற்றோர் விடுவிக்கப்பட்டனர்.
‘ஏசிபி நிகிதா’, ‘தபஸ்யா’ போன்ற தொடர்களில் நடித்த லட்சுமிப்பிரியா பெஹரா, பல படங்களிலும் நடித்திருந்தார். அவரது மரணம் ஒடிசா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.





