
கொழும்பு – மாளிகாவத்தை தொடருந்து வீட்டுத் தொகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற பணியாளர் மற்றும் அவரது மனைவியை மயக்கமடைய செய்து, கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தம்பதியிடம் 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலைத் தேடி, தெமட்டகொட பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடகைக்கு வீட்டினை பெற்றுக்கொள்வது போன்று நடித்த 40 வயதான பெண் உள்ளிட்ட மூவர் அடங்கிய கொள்ளைக் கும்பலே இவ்வாறு திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, இந்த வீட்டுத் தொகுதிக்கு வந்த அந்தப் பெண், தம்பதியரின் வீட்டிற்கு மேல் மாடியிலுள்ள வீட்டை வாடகைக்கு பெறப் போவதாக கூறி, தண்ணீர் குடித்துவிட்டுச் சுமுகமாகப் பேசி பழகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் அந்த வீட்டிற்கு வந்த சந்தேக நபரான பெண், வீட்டின் உரிமையாளரும் தரகரும் வரும் வரை காத்திருக்க வேண்டும் எனக் கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது கணவன் எனக் கூறி ஒருவரும், பின்னர் தரகர் மற்றும் இளைஞனும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
திடீரென குறித்த தம்பதியை மயக்கமடையச் செய்த நிலையில், அவர்களிடமிருந்த தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் சூட்சுமான முறையில் வீட்டின் முன் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




