
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29.05.2026) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.

நேற்று இரவு 9.30 மணியளவில் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பெரியஉளுக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ். தில்ஹால் சதுரங்க (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை அடுத்து, சொகுசுப் பேருந்தின் ஓட்டுநரை ஈரற்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரற்பெரியகுளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





