
அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்விகமாகக் கொண்ட தேவ் பிஜி (26) பைலட்டாகப் பணிபுரிந்து வந்தார். பிஜியும் செவிலியர் ஜெஸ்னியும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நியூ டெஸ்டமென்ட் தேவாலயத்தில் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர்.
அப்போது முதல் காதலித்து வந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், டாசன்வில்லே நகரில் உள்ள ‘தி ரெவெர்’ என்ற இடத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது
சுமார் 400 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த திருமணத்தில் தேவ் பிஜி மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். திருமண வரவேற்பு முடிந்ததும், ஹனிமூன் செல்வதற்காக தேவ் தம்பதியினர் ‘ராபின்சன் ஆர்66′ ஹெலிகாப்டரில் ஏறினர்.
அப்போது வானிலை மோசமாக இருந்தது. இதனால் ஒரு பைலட் என்ற முறையில், இப்போது ஹெலிகாப்டரில் பயணிக்க வேண்டாம் என பைலட்டிடம் தேவ் கூறியுள்ளார். ஆனால், அதிக உயரத்தில் பறக்கலாம் என்று கூறி பைலட் ஹெலிகாப்டரை இயக்கினார்.
ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, திருமணம் நடந்த இடத்துக்கு அருகிலேயே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் டேவ் பிஜி மற்றும் ஹெலிகாப்டர் பைலட் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த மணமகள் ஜெஸ்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந் நிலையில் 10 ஆண்டு காலம் காதலித்து திருமணம் நடைபெற்ற சில மணி நேரங்களில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




