கர்நாடகவில் கட்டுமான நிறுவனத்தில் கூலி வேலை செய்யும் வாலிபர் ஒருவர், கைப்பேசியை சார்ஜ் செய்து கொண்டே பேசியதில் மின்சாரம் பாய்ந்து வெடித்ததில் பலத்த காயமடைந்துள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் என்ற 18 வயது வாலிபர், மைசூர் நகரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்தபடி, பணி நடைபெறும் கட்டிட வளாகத்தில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த மூன்றாம் திகதி இவரது செல்போனுக்கு சார்ஜ் போட்டிருந்த போது தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அந்த அழைப்புக்கு பதில் சொல்லும் அவசரத்தில் சார்ஜர் இணைப்பில் இருந்து விடுவிக்காமலேயே அவர் பேச முயன்றபோது பயங்கர சத்தத்துடன் செல்போன் பேட்டரி வெடித்து சிதறியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நண்பர்கள் பணியாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட அவசர சிகிச்சையில் அந்த நபரின் சிதைந்த முகத்தில் அவரது தொடை பகுதி தோலை எடுத்து ஒட்டி தையல் போட்டுள்ளனர்.
மேலும், கீழ் தாடை பகுதியின் முக்கிய எலும்பு சேதம் அடைந்து விட்டதால் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து விட்டாலும், முன்னர் இருந்த முக அமைப்பை மீண்டும் பெற பல லட்சம் ரூபாய் செலவும், பல ஆண்டு காலமும் ஆகும் என தெரியவந்துள்ளது.