இந்திய ராஜஸ்தானில் கழிவறைக்குள் பிறந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்து உயிர் பிழைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவுரி பல்பி (32) என்ற நிறைமாத கர்ப்பிணி தனது கணவர், தாயாருடன் சூரத்காரில் இருந்து ஹனுமன்காருக்குய் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
ஹனுமன்கார் ரயில்வே நிலையத்திற்கு 13 கிலோமீற்றர் தூரத்திற்கு முன்னால், பல்பிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக ரயிலில் உள்ள கழிவறைக்கு சென்ற அவருக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது.
பல்பி மயக்க நிலையில் இருந்ததால் குழந்தை கழிவறை தொட்டியின் வழியே ஓடும் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்து விட்டது. ரயிலும் ஹனுமன்கார் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.
நீண்ட நேரம் ஆகியும் மனைவி கழிவறையில் இருந்து வெளியே வராததால் அவரது கணவர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக காவல்துறையினர் கழிவறையின் கதவை திறந்து, மயங்கி கிடந்த பல்வியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் தண்டவாளத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த பச்சிளம் குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர், தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.