வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி பாதிக்கப்பட்ட மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய வீட்டுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை கண்டித்தும் வீட்டுத் திட்டம் கோரியும் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்றைய தினம் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை நடத்தியிருந்தனர்.
இதில் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகார்களும் கலந்து குரல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், வவுனியா மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் தமது ஆர்ப்பாட்டத்திற்கும் தமது நியாயமான கோரிக்கைகளுக்கும் வலுச் சேர்க்கும் வகையில் கலந்து கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியாவில் நடைபெறும் விழாக்களில் வலம் வரும் இவர்கள் மக்கள் நலன்சார் போராட்டங்களில் கலந்து கொள்ளாமை வருத்தமளிக்கின்றது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வவுனியாவில் இறுதியாக நடைபெற்ற காணாமல் போனோர் உறவுகளின் ஆர்ப்பாட்டத்திலும் தமிழரசுக் கட்சி உறுப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.