16 வயது பாடசாலை மாணவி வவுனியா, கனகராயன்குளத்தில் குழுவாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு காயமடைந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஊடக செய்திகள், இணையத்தள மனு என்பன இந்த சம்பவம் தொடர்பாக சுட்டிக்காட்டியதை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவம் பற்றிய விசாரணை செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் கருத்திட்டுள்ள சிறுவர் நல விவகார ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மற்றும் அதிகார சபையின் பொலிஸ் அதிகாரி ஆகியோர் சம்பவம் குறித்து ஆராய மாங்குளம் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அவர்கள், சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது மேற்கொண்டு வரும் விசாரணைகளை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாலியல் வல்லுறவு காரணமாக சிறுமி உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தாக மருத்துவர் கூறியதாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கிய மாணவியின் பாட்டி தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கு பின்னரான பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பொலிஸார் வழங்கிய அறிக்கையில் மரணம் இயற்கையான மரணம் என கூறப்பட்டிருந்தது. மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மேலதிக விசாரணைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
கனகராயன்குளம் பொலிஸார் நேற்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுடன், உடலை கொழும்புக்கு அனுப்பி முழுமையான பிரேத பரிசோதனைகளை நடத்தி, மார்ச் மாதம் 30 ஆம் திகதி அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம், பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
தொடர்புபட்ட செய்தி வவுனியாவில் 16 வயது மாணவி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை!!(படங்கள்)