வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையில் இருந்த உதவி பிரதேச செயலாளரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரைக் கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவிக்கையில்..
வவுனியா பிரதேச செயலகத்திற்கு காணிப்பிரச்சினை தொடர்பாக வவுனியா, சமணங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்றதாகவும், அது தொடர்பாக உதவி பிரதேச செயலாளருடன் கதைத்த போது அவர் தனக்கு சார்பாக செயற்படாததால் கோபமடைந்த குறித்த நபர் உதவி பிரதேச செயலாளரை தகாத வார்த்தையால் திட்டியபடி பிரதேச செயலகத்தை விட்டு வெளியேறமுற்பட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கு நின்ற சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவரை தடுக்க முற்பட்ட வேளை அவரது கையில் கடித்துவிட்டு தப்ப முயன்ற நிலையில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்த குறித்த நபா் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இதேவேளை கடித்ததால் காயமடைந்த சமுர்த்தி உத்தியோகத்தர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட குறித்த நபர் சுவிஸ் நாட்டில் இருந்து அண்மையில் வருகை தந்தவர் என தொிவிக்கப்பட்டுள்ளது.