வவுனியா நகரசபையின் சுகாதார தொண்டர்கள் இன்று (21.03) வவுனியா நகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் சுகாதார தொண்டர்களுக்கான நியமனம் இன்று வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வவுனியா நகர சபையில் பணியாற்றும் ஏழு பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாத நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த 7 சுகாதார தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏனைய சுகாதார தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ‘ஏனைய மாகாணங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள கல்வி தகுதியை வடக்கிலும் அமுல்படுத்து’, ‘உள்ளக வெற்றிடம் உள்ளக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தனர்.
அதனை தொடர்ந்து வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு செல்ல முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். அதன்போது அங்கு வந்த வட மாகாண சுகாதார அமைச்சர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதை அடுத்து இப்பிரச்சினைக்கு வெகு விரைவில் தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தார்.