வவுனியாவில் ஐ.நா அனுசரணையில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

453

ஐ.நா அனுசரணையில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் இன்று(23.03) ஆர்ப்பாட்டமொன்று வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இதன்போது காணாமல்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை எனவும் சர்வதேச விசாரணையே தேவையெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பின்னர் மன்னார் வீதி வழியாக யாழ் வீதியை வந்தடைந்து வவுனியா மாவட்ட செயலகத்தில் மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்திருந்தது.

இதன்போது கொலைகாரர்களிடமே நியாயமா?, ஏமாற்றும் உள்ளக விசாரணை வேண்டாம் ஐ.நா. அனுசரணையிலான விசாரணைக்குழுவே வேண்டும், கொலைகாரனிடம் நீதியை எதிர்பார்ப்பதா?,ஐ.நாவே இனப்பிரச்சனையில் தலையிடு, உள்ளக விசாரணை ஸ்ரீலங்கா அரசின் ஏமாற்று நாடகம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இந் நிலையில் மாவட்ட செயலகத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள் வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்திருந்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர இவ்விடயம் தொடர்பாக உரிய இடத்திற்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது காணாமல் போனோரின் உறவுகளுடன் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் ரி.தேவராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வன்னி அமைப்பாளர் எஸ். கோவிந்தராஜ், அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1 2123