தமிழக-ஆந்திர எல்லையில் பதற்றம்!!

565

BODY

திருப்பதி வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர், ஆந்திர பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழக-ஆந்திர எல்லையில் பதற்றம் காரணப்படுகிறது.

ஆந்திர அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடைபெறுவதால் ஆந்திரா செல்லும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆந்திர வனப்பகுதியில் செம்மர கட்டைகளை கடத்தியதாக தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர பொலிசார் நேற்று சுட்டுக் கொன்றனர். கொலை செய்யப்பட்ட தொழிலாளர்கள் தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர்களும் கண்டறியப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் உடல்கள், ஆந்திர அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நடத்தப்பட்டது. அதிக பணம் தருவதாக தமிழக தொழிலாளர்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்தலுக்காக சிலர் பயன்படுத்தியதாகவும் கூறி மலைவாழ் மக்களும். இறந்தவர்களின் உறவினர்களும் குற்றம் சாட்டியதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லையில் பதற்றம்

ஆந்திர அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக, ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கல்வீச்சு ஆகியவை நடந்து வருகின்றன. இதனால், தமிழகத்திற்கான பஸ் போக்குவரத்தை ஆந்திர அரசு இன்று நிறுத்தி உள்ளது. திருச்சியை அடுத்த துவாக்குடியில் ஆந்திர சுங்கச்சாவடி மீது 15 பேர் கொண்ட கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் சுங்கச்சாவடியின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஆந்திரா கலாச்சார கழகத்தையும் பல்வேறு அரசியல் கட்சிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.

உள்துறை அமைச்சகம் உத்தரவு

தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தொடர்ந்து இது தொடர்பாக ஆந்திர அரசு அறிக்கை தர வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில் பலியானவர்களின் விபரம், தாக்குதல் நடந்த இடும், தாக்குதல் நடத்தியவர்கள் விபரம், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து குறிப்பிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.